சிரியாவிற்கு உதவ ஜெனீவா செஞ்சிலுவைச் சங்கம் முடிவு
மார்ச்,06,2012. சிரியாவின் ஹோம்ஸ் நகரில் ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்த பொதுமக்களுக்கு
மருத்துவ உதவிகளைச் செய்ய ஜெனீவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முன்வந்துள்ளது. இது
குறித்து உரைத்த மருத்துவ சேவை செய்தித் தொடர்பாளர் சாலிகு தவாகே, பாபா ஆம்ருக்கு 3 கி.மீட்டர்
தொலைவில் உள்ள ஆபெல் கிராமத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தமது மருத்துவச் சேவையைத்
தொடங்கியுள்ளதாகக் கூறினார். இந்தக் கிராமத்தில் உள்ள பலருக்கு உணவுப்பொருட்களும்,
குளிருக்கு போர்வையும் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், அடுத்ததாக இன்ஷாத் என்ற ஊரில்
தங்கள் பணிகளைத் தொடர உள்ளதாகவும் அப்போது சிரியாவின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தாரும்
இச்சேவையில் இணைய உள்ளதாகவும் கூறினார். இதனைத் தொடந்து செஞ்சிலுவைச் சங்கத்தினரின்
பாதுகாப்புக்காக பெரிய இராணுவ வாகனங்கள் பாபா ஆம்ர் பகுதிக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவம்
நடத்திய அட்டூழியங்களைச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் பார்வையிடக் கூடாது என்பதற்காக சிரியாவின்
அரசு ஆதரவாளர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தினரைத் தடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை
சிரியாவில் நடந்த மக்கள் போராட்டத்தில் 7500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா.வின் தகவல்கள்
தெரிவிக்கின்றன.