2012-03-05 15:15:54

திருத்தந்தை : நாம் நம் சகோதர்களின் மறைப்பணியாளர்கள்


மார்ச்,05,2012. உலகின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு நிலைகளில் வாழும் நம் சகோதரகளுக்கு மறைப்பணியாளர்களாகச் செயல்படவேண்டிய கடமை ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உள்ளது என இஞ்ஞாயிறு தான் மேற்கொண்ட பங்குதள சந்திப்பின்போது மறையுரையாற்றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் நகரின் ஆயர் என்ற முறையில் இஞ்ஞாயிறன்று உரோம் நகரில் தென்பகுதியில் உள்ள தொர்ரினோவின் புனித ஜான் பேப்டிஸ்ட் தெ ல சால் பங்குதளம் சென்ற பாப்பிறை, உண்மையான வாழ்வை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லாத தவறான போதனைகள் நம்மை வந்தடையும்வரைக் காத்திருக்காமல், நாமே உண்மை நற்செய்தியின் பணியாளர்களாக மாறவேண்டும் என விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
விசுவாசம் என்பது ஒன்றிணைந்து வாழப்படவேண்டிய ஒன்று என்பதை வலியுறுத்திய பாப்பிறை, இவ்விசுவாச வாழ்வை வாழும் முறையை நாம் பங்குதளங்களின் வழி அறிந்துகொள்கிறோம் என்றார்.
நவீன சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும், 'மதம் குறித்த அறியாமை' நீக்கப்பட, துவங்கவிருக்கும் 'விசுவாச ஆண்டில்' ஒவ்வொரு பங்குத்தளமும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.