மனித உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை விவிலியத்தின் மூலம் கற்றுக் கொண்டேன்
- க்யூபா நாட்டின் புரட்சியாளர்
மார்ச்,01,2012. மனிதர்களின் உரிமைகளும் சுதந்திரமும் எப்போதும் நிலைநிறுத்தப்பட வேண்டும்
என்பதை தான் விவிலியத்தின் மூலம் கற்றுக் கொண்டதாக க்யூபா நாட்டின் புரட்சியாளர்களில்
ஒருவரான Jose Daniel Ferrer கூறினார். 2003ம் ஆண்டு க்யூபா நாட்டில் கம்யூனிச ஆட்சிக்கு
எதிராக எழுந்த புரட்சியைத் தலைமை ஏற்று நடத்தியவர்களில் ஒருவரான Ferrer உட்பட 75 பேருக்கு
க்யூபா அரசு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியது. கத்தோலிக்கத் திருஅவை
க்யூப அரசுடன் மேற்கொண்ட முயற்சிகளால் 2011ம் ஆண்டு இந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களில் Ferrer, ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று குடியேறும் வாய்ப்பை மறுத்துவிட்டு,
க்யூபாவிலேயே தங்கி அங்கு அரசியல் மாற்றத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால்,
மீண்டும் கைது செய்யப்பட்டு, இச்செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டார். தனது நாட்டை
கம்யூனிச ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க முயற்சிகளைத் தொடர்வதே தனக்கு விவிலியம் தரும்
அழைப்பு என்றும், அருளாளர் இரண்டாம் ஜான்பால் கூறியுள்ள பல கருத்துக்கள் தன் வாழ்வை வழிநடத்துகின்றன
என்றும் Ferrer கூறினார். அருளாளர் இரண்டாம் ஜான்பால் தனிமனித விடுதலையைப் பற்றி தெளிவாகக்
கூறியிருந்தாலும், அவரோ, வேறு திருத்தந்தையர்களோ க்யூபா நாட்டுக்கு விடுதலைக் கொணர முடியாது
என்றும், இந்நாட்டின் விடுதலையைப் பெறுவது நாட்டு மக்களின் முக்கிய கடமையே என்றும் Jose
Daniel Ferrer சுட்டிக்காட்டினார். இம்மாதம் இறுதியில் 25 முதல் 28 வரை திருத்தந்தை
16ம் பெனடிக்ட் க்யூபா நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத் தக்கது.