தமிழ்நாட்டில் சூரிய சக்தியின் மூலம் 3லட்சம் வீடுகளுக்கு மின்சாரம்
வழங்க திட்டம்
மார்ச்,01,2012. சூரியசக்தியின் மூலம் மின்சாரத் தேவைகளை நிறைவு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தை உருவாக்கி தந்துள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுக் குழு, அரசின் ஒப்புதலுக்காக
காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, 2000 அரசு அலுவலகங்கள்
தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகவும், நடப்பு ஆண்டின் இறுதிக்குள், இத்தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி 1000 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்
மட்டும் 1000 அரசு அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு 1கிலோவாட் சூரிய ஒளியை மின்
ஆற்றலாக மாற்றும் சூரியஒளித் தகடுகள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுக்
குழுவின் பொது மேலாளர் ஸ்ரீனிவாஸ் சங்கர் கூறினார். சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கப்பட
உள்ள மின்சாரத்தை 3 லட்சம் வீடுகள் மற்றும் 1 லட்சம் தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த மாநில
அரசு திட்டமிட்டுள்ளது என்றும், தங்களது நிறுவனம் இவ்வாண்டு இறுதிக்குள், 60 ஆயிரம் வீடுகள்
மற்றும் 20 ஆயிரம் தெருவிளக்குகளுக்கு சூரியஒளித் தகடுகளை நிறுவ தீர்மானித்துள்ளது என்றும்
ஸ்ரீனிவாஸ் சங்கர் கூறினார். சூரிய சக்தியைப் பயன்படுத்தும் முயற்சிகளை ஒரு சில முன்னணி
வர்த்தக நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. மார்ச் 12 மற்றும் 13 தேதிகளில் சென்னையில் நடைபெற
உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த சர்வதேச மாநாட்டில், இதுகுறித்து விவாதிக்க இருப்பதாக
அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.