2012-02-29 15:35:04

மிலான் நகரில் நடைபெறும் அகில உலக குடும்பங்கள் மாநாட்டில் திருத்தந்தை கலந்து கொள்வார்


பிப்.29,2012. இவ்வாண்டு மேமாதம் 30ம் தேதி முதல் ஜூன் மாதம் 3ம் தேதி வரை மிலான் நகரில் நடைபெறும் அகில உலக குடும்பங்கள் மாநாட்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கலந்து கொள்வார் என்று மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola அறிவித்தார்.
திருத்தந்தை மிலான் நகருக்கு வருகை தந்து, ஜூன் மாதம் 1ம் தேதியிலிருந்து 3ம் தேதி வரை மாநாட்டில் கலந்து கொள்வது வரலாற்று சிறப்பு மிக்க செய்தி என்று, இந்த மாநாட்டைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில் கர்தினால் Scola கூறினார்.
"குடும்பம்: வேலை மற்றும் கொண்டாட்டம்" என்ற மையக் கருத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு மூச்சுடன் நடைபெறுகிறதென்று கூறிய கர்தினால் Scola, ஒவ்வொரு குடும்பத்திலும் வேலைகளையும், கொண்டாட்டங்களையும் இணைத்துச் செல்வதற்கு குடும்பங்களுக்குத் தேவையான பாடங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கர்தினால் Scola விளக்கினார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் மிலான் நகருக்கு வருகை தந்து 27 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அந்நகருக்கு மூன்று நாட்கள் வருகை தருவது மிலான் நகரின் வரலாற்றில் முக்கியமான ஒரு நிகழ்வு என்று மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.