மியான்மார் நாடு உறுதியான தன்மையைக் கட்டி எழுப்ப முயற்சித்து வருகிறது, ஐ.நா. பிரதிநிதி
பிப்.25,2012. மியான்மார் நாடு, மாற்றத்தின் பாதையில் துவக்க கட்டத்தில் மட்டுமே உள்ளது,
அந்நாடு, நிலையான அமைதியையும் உறுதியான தன்மையையும் எட்டுவதற்கு அந்நாட்டின் நீண்ட காலச்
சவால்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா.உயர் அதிகாரி கூறினார். மியான்மாரின் நீண்ட
காலப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அந்நாடு எடுத்துள்ள முக்கியமான முயற்சிகளாக, இதுவரை
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கருதுவதாக ஐ.நா.பொதுச் செயலரின் மியான்மாருக்கானச் சிறப்பு
ஆலோசகர் விஜய் நம்பியார் கூறினார். கடந்த வாரத்தில் மியான்மார் சென்று திரும்பியுள்ள
நம்பியார், சனநாயக வழிகளுக்கு அவ்வரசு எடுத்துள்ள முயற்சிகளில் நம்பகத்தன்மையை நிரூபிக்க
வேண்டும் என்றும் நிருபர்களிடம் தெரிவித்தார்.