2012-02-25 14:38:21

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 தவக்காலத்தை ஆரம்பித்திருக்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் நாம் கடைபிடிக்கும் இந்த வழிபாட்டு காலத்தைப் பற்றிய நமது எண்ணங்களை இந்த ஞாயிறு சிந்தனையின் துவக்கத்தில் சிறிது ஆழப்படுத்த முயல்வோம். தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை ஆங்கிலத்தில் Lenten Season என்று அழைக்கிறோம். Lenten என்ற வார்த்தை Lencten அல்லது, Lengten என்ற Anglo Saxon வார்த்தையில் இருந்து வந்தது. அதன் பொருள் வசந்தம். தவக்காலத்தை ஒரு வசந்த காலமாக எண்ணிப் பார்ப்பது ஓர் அழகான எண்ணம். புதுமையான எண்ணம்.
பொதுவாக, தவக்காலம் என்றதும் சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்று சோகமான, துயரமான அடையாளங்கள் மனதை நிரப்பும். ஆனால், தவக்காலம் வசந்தத்தைக் கொண்டுவரும் புதியதொரு ஆரம்பம் என்ற பொருளிலும் பாப்பது நல்லது. ‘வசந்தம்’ கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன் மாற்றங்கள், வேதனைக்குரிய மாற்றங்கள் நடைபெற வேண்டும். மாற்றங்கள் என்றதும், முற்றிலும் அழிந்துபோன ஒன்று மீண்டும் உயிர்பெறுவதும் ஒரு மாற்றம்தானே. இந்தக் கண்ணோட்டத்தில், சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் Phoenix பறவையைத் தவக்காலத்தின் ஓர் அடையாளமாக நாம் சிந்திக்கலாம்.

தவக்காலத்திற்கும் வசந்த காலத்திற்கும் என்ன தொடர்பு? Phoenix பறவை தவக்காலத்திற்கு எப்படி ஓர் அடையாளமாகும்? சிந்திக்க வேண்டிய கேள்விகள். உலகின் பல நாடுகளில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை கடும் குளிர்காலம். இந்தக் குளிர்காலத்திற்கு முன்னால் மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, இந்த இரு பருவங்களிலும் மரங்கள், செடிகள் எல்லாம் தங்கள் இலைகளை இழந்து பனியில் உறைந்து போயிருக்கும். பனியில் உறைந்துபோன தாவர உயிரினங்களைப் பார்க்கும்போது, இனி இவை பிழைக்கப் போவதில்லை என்ற எண்ணம்தான் மேலோங்கும். ஆனால், பனிக்குள் உறைந்து போன உயிர்கள் சிறுதுளிர்களாய், கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனி விலகியதும், அந்தத் துளிர்கள் தலை நிமிரும். மீண்டும் தாவர உலகம் தழைத்து வரும். அதுதான் Lenten Season எனப்படும் வசந்த காலம்.
Phoenix பறவையும் அப்படியே. 500 அல்லது 1000 ஆண்டுகள் வாழ்ந்ததாய் சொல்லப்படும் இந்தப் பறவை, தன் வாழ்வு முடியப்போகிறது என்று உணரும் வேளையில், தனக்கென கூடு ஒன்றைக் கட்டி அதற்குள் அமர்ந்துகொண்டு தன் கூட்டுக்குத் தீ மூட்டும். தீயில் எரிந்து அந்தப் பறவை சாம்பலாகும் போது, அதன் அடுத்தத் தலைமுறையான பறவை வெளி வரும். புராணங்களில் சொல்லப்படும் ஒரு தகவல் இது. இந்தப் புராணப்பறவை உண்மையா இல்லையா என்ற ஆராய்ச்சிகளை விலக்கி விட்டு சிந்தித்தால், கற்பனையில் நாம் காணும் இக்காட்சி, ஓர் அடையாளமாக, பாடமாக அமையும். நெருப்புக்குள் நிகழும் புதுமைகள் தான் எத்தனை எத்தனை. நெருப்பை, அழிக்கும் கருவியாகவே அதிகம் பார்த்து பழகிவிட்ட நமக்கு, அழிவுக்குள் நிகழும் அற்புதங்களை மறந்து போக வாய்ப்புண்டு.

அழிவுகளிலும் அற்புதங்களை நிகழ்த்தும் இறைவனை நமக்கு நினைவுறுத்துகிறது இன்றைய முதல் வாசகம். நோவா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில் இறைவன் புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் ஓர் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் தொடக்க நூலில் இவ்வாறு ஒலிக்கின்றன:
தொடக்கநூல் 9: 8-15
கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: இதோ! நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும், பேழையிலிருந்து வெளிவந்து உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன்.

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திருச்சபை நம்மை அழைக்கிறது. தவக்காலத்தைப் புத்துயிர் தரும் வசந்தகாலம் என்ற வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுபோல், சோதனைகளைப் பற்றியும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.
சோதனை என்ற வார்த்தையைக் கேட்டதும், நம்மில் பலருக்கு அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் போல் தோன்றலாம். அவ்வளவு பயம். ஆர அமர சிந்தித்தால், சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மைகளை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும் இன்றைய நற்செய்தியின் மூலம் நமக்குத் தரப்படும் நல்ல பாடங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன், தவக்காலத்தின் இந்த முதல் ஞாயிறுக்கான மறையுரையைப் பற்றி இன்னொரு குருவோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். சோதனை என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் ஒரு பழைய திரைப்பட பாடலைப் பாட ஆரம்பித்தார். "சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி." என்ற பாடல். தீர்க்க முடியாத பிரச்சனைகளில் சிக்கியுள்ள ஒரு வீட்டுத் தலைவன் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
சில திரைப்படப் பாடல்களை நாம் அடிக்கடி கேட்பதால், அந்தப் பாடல்கள் கூறும் சொற்கள் நம் நினைவுகளில் ஆழமாய் பதிந்துவிடும். இந்தத் திரைப்படத்தைப் பார்க்காதவர்களும் இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள், இவ்வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார்கள். சோகத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட இந்தப் பாடலைப் பாடும் போது, எதுவுமே செய்யமுடியாத ஓர் இயலாத்தன்மை மனதை ஆக்ரமிக்கும். நம்மை மீறிய ஒரு சக்தியில் நாம் மாட்டிக்கொண்டோம், எனவே நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணங்கள், உணர்வுகள் நம்மில் எழும்.

சோதனைகள் எப்படிப்பட்டவை என்பதை அறிந்திருந்தாலும், அவைகளுக்கு இடம் தரும் நம் போக்கை விளக்கும் ஒரு கதை இது. சிவப்பு இந்தியர் என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பழங்குடியினர் மத்தியில் ஒரு வழக்கம் உண்டு. அவர்கள் சமுதாயத்தில், ஓர் இளைஞன் வயதுக்கு வரும் வேளையில் அவர் சில நாட்கள் காட்டிலும் மலையிலும் தனியே தங்கி, தன்னையே ஒரு சக்திமிகுந்த வீரனாக மாற்றிக் கொள்ளவேண்டும். இந்தச் சமுதாயச் சடங்கில் ஈடுபட்டிருந்த ஓர் இளைஞன், ஒரு நாள் பனி படர்ந்திருந்த ஓர் உயர்ந்த மலையுச்சியைச் சென்றடைந்தார். உலகின் உச்சியை அடைந்து விட்டதைப் போன்ற வெற்றிப் பெருமிதத்துடன் அவர் அங்கு நின்றுகொண்டிருந்தபோது, காலடியில் ஏதோ ஊர்ந்ததைப் பார்த்தார். அது ஒரு கட்டுவிரியன் பாம்பு. அந்தப் பாம்பு இளைஞனிடம் பேசியது: "நான் இறக்கப் போகிறேன். நான் இந்தப் பனியில் இருந்தால், ஒன்றும் கிடைக்காது. எனவே, தயவுசெய்து என்னை உன் கம்பளிப் போர்வைக்குள் வைத்து கீழே எடுத்துச் சென்று, அங்கே என்னை விட்டுவிடு. உனக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்" என்றது. இளைஞன் பாம்பிடம், "உன் குணம் எனக்குத் தெரியும். நான் உன்னைக் கையில் எடுத்தால், நீ என்னைக் கடித்துக் கொன்று விடுவாய்." என்றார். பாம்பு அவரிடம், "கட்டாயம் இல்லை. உன்னிடம் நான் அப்படி நடந்துகொள்ள மாட்டேன்." என்று கூறியது. இளைஞன் தயங்கியபோதிலும், கட்டுவிரியன் நயமாகப் பேசி, அவரைச் சம்மதிக்க வைத்தது.
இளைஞன் பாம்பை எடுத்து தன் கம்பளிப் போர்வைக்குள் வைத்துக் கொண்டு கீழே இறங்கினார். சமவெளியை அடைந்ததும், பாம்பை எடுத்து தரையில்விட அவர் முயன்றபோது, கட்டுவிரியன் திடீரென இளைஞனைக் கடித்தது. "என்னைக் கடிக்கப் போவதில்லை என்று உறுதி அளித்தாயே" என்று இளைஞன் கதறினார். பாம்பு அவரிடம், "மலை உச்சியில் என்னை நீ கையில் எடுக்கும்போதே, என் குணம் உனக்கு நன்றாகத் தெரிந்திருந்ததே!" என்று சொல்லிவிட்டு அதன் வழி சென்றது.
போதை, மது, பேராசை, பதவிவெறி என்று நம் வாழ்வைச் சற்றி வருபவை நச்சுப் பாம்புகள் என்று தெரிந்தும், அவற்றைத் தூக்கி, கடிபடுகிறோமே!

சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? தப்பித்துக் கொள்ள முடியாத அளவு பெருகியுள்ள ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவது போல நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்வதால், சோதனைகளுக்கு ஓர் அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். சோதனைகளுக்கும், அவற்றின் மூல காரணமான தீய சக்திகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை.
சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ்மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவைகளைத் தட்டி எழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதையும் நாம் நம்ப வேண்டும்.
நாம் வாழும் உலகில் நல்லவைகளும், ஆக்கப்பூர்வமான செயல்களும் நடக்கின்றன. தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், ஒரு சாபக்கேடாக, நமது செய்தித் தாள்கள், தொலைகாட்சி, வானொலி என்று அனைத்துத் தொடர்புச்சாதனங்களும் பெருமளவில் அழிவையே நமக்குப் படங்களாக, கதைகளாகச் சொல்லி நம் மனதை உருக்குலைய வைக்கின்றன. வசூலுக்குச் சுவையானவை இந்தக் கோரங்கள்! ஆனால், வாழ்க்கையில் இவை உண்டாக்குவது விபரீதங்கள். இவைகளையே ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்க்கும் போது, "ச்சே, என்னடா உலகம்" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது. "சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி." என்று சொல்லவைத்து விடுகின்றது.

இப்படி ஓர் இயலாத்தன்மை நமக்கு ஊட்டப்படும் போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு பிரமை, ஒரு மாயை நம்மில் வளர்கிறது. இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும். இயேசு சோதனைகளைச் சந்தித்தது, அவைகளை வென்றது நமக்கு நல்லதொரு பாடமாக அமைய வேண்டும்.
'Tis one thing to be tempted, another thing to fall' - William Shakespeare. “சோதிக்கப்படுவது வேறு, சோதனையில் விழுவது வேறு.” ஷேக்ஸ்பியர் எழுதிய வரிகள் இவை. இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால், சோதனையில் விழவில்லை. நாமும் சோதனைகளைச் சந்திக்கும்போது, அந்த இறைமகன் சொல்லித்தந்த பாடங்களையும், அவர் சொல்லித்தந்த அந்த அற்புத செபத்தின் வரிகளையும் நினைவில் கொள்வோம். "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும்."








All the contents on this site are copyrighted ©.