2012-02-24 15:04:43

பிப் 24, 2012. கவிதைக் கனவுகள்.......... மரணம் நிலையல்ல!


மரணம் ஒரு காட்சி மறைவே.
என்னுள் உறையும் உன்
எண்ணங்கள் வாழும்வரை
சாவும் ஒரு சம்பிரதாயமே.
நீ அங்கு எனக்காகவும்
நான் இங்கு உனக்காகவும்
காத்திருப்பதிலும் எத்தனை அர்த்தங்கள்!

மரணம் வெறுமை என்றால்
வாழ்வுக்கு அர்த்தமில்லை.
வாழ்வு மாயை என்றால்
மரணம் தேவையில்லை.
பிறப்பும் இறப்புமாய்
கிடைப்பதும் இழப்பதுமாய்
எத்தனை கண்ணாமூச்சி விளையாட்டு!
வருவதும் போவதுமான
சத்திரச்சாவடி வாழ்வு இது.

உயிர்க்காற்றெனும் உருவமில்லா இயற்கை
விடை பெற்றபோது
வெறும் உருவம் மட்டுமே தங்கியது.
முற்றும் என்பது வாழ்வுக்கு இல்லை.
இது ஒற்றையடிப் பாதைதான்,
ஆனால் முடிவதில்லை.
பெரிய சாலைகளில் ஒன்றிணைந்து
தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
வாழும் இடம் நிர்ணயித்த போகுமிடத்தில்
என்றாவது ஒருநாள் சந்திப்போம் என்ற
நம்பிக்கை இன்னும் மிச்சமிருக்கிறது.








All the contents on this site are copyrighted ©.