2010ம் ஆண்டில் 11 ஆயிரம் சிறார்ப் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்
பிப்.24,2012. உலகில் குறைந்தது 15 நாடுகளில், ஆயுதம் ஏந்திய கும்பல்கள் அல்லது இராணுவத்தினருக்கு
ஆயிரக்கணக்கான சிறார் ஆபத்தான வேலை செய்வதற்குத் தினமும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்
என்று பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது. உளவாளிகள் அல்லது பாலியல் அடிமைகள் போன்ற ஆபத்தான
வேலை செய்வதற்கு ஆயிரக்கணக்கான சிறார்க் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று கூறும் அச்செய்தி
நிறுவனம், மியான்மார், ஆப்கானிஸ்தான், சாட், சொமாலியா, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, கொலம்பியா
உட்பட பல நாடுகளில் சுமார் 14 ஆயிரம் சிறார் வீடுகளிலிருந்து கடத்தப்பட்டு, அவர்கள் தப்பித்துச்
செல்லாமல் இருப்பதற்காக நெருப்பால் சுடப்படுகின்றனர் என்றும் கூறியது. மருந்துகள்
மற்றும் பிற அச்சுறுத்தல்களால் இச்சிறார், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடுஞ்செயல்களைச்
செய்கின்றனர் எனவும் பீதெஸ் அறிவித்தது. 2010ம் ஆண்டில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட
சிறார் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் சமூகத்தில் இணைக்கப்பட்டனர் என்று
ஐ.நா. அறிக்கையில் வெளியானதையும் இச்செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியது.