உலகில் பட்டினியால் வாடுவோரை எண்ணிப்பார்க்க உண்ணாநோன்பு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது
- எருசலேம் முதுபெரும் தலைவர்
பிப்.23,2012. தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் உண்ணாநோன்பு, கிறிஸ்துவை பின்பற்றவும்,
உலகில் பட்டினியாலும் தாகத்தாலும் வாடுவோரை எண்ணிப்பார்க்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது
என்று எருசலேம் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் பேராயர் Fouad Twal கூறினார். இப்புதனன்று
ஆரம்பமாகியுள்ள தவக்காலத்தையொட்டி, பேராயர் Twal விடுத்துள்ள தவக்காலச் சுற்றுமடலில்
இந்தச் சிறப்பு வழிபாட்டுக் காலத்தைப் பற்றிய தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார். தவக்காலத்தையொட்டி
ஒவ்வோர் ஆண்டும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் விடுத்துள்ள பல்வேறு செய்திகளைத் தன் மடலில்
குறிப்பிட்டுள்ள பேராயர், 2012ம் ஆண்டில் திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ள
பிறரன்பு, அந்த அன்பின் அடிப்படையில் உருவாகும் செயல்கள் ஆகியவற்றையும் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார். அமைதியின்
இளவரசராக புனித பூமியில் பிறந்த இயேசு, தன் சீடர்களுக்கு இறுதியில் வழங்கிய பெரும் கொடையும்
அமைதி என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் Twal, இந்த அமைதியின்றி துன்புறும் மத்தியக்கிழக்குப்
பகுதியில் மீண்டும் அமைதி நிலைபெறும்படி நமது தவக்கால முயற்சிகள் அமையட்டும் என்ற அழைப்பை
தன் மடலில் விடுத்துள்ளார்.