2012-02-22 15:31:34

இந்தியா : இரயில்வே பாதுகாப்பு மிகவும் மோசம்


பிப்.22,2012. இந்தியாவில் இரயில்வே பாதுகாப்பு மிகவும் மோசமாக இருப்பதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மோசமாக இருப்பதாலேயே ஆண்டொன்றுக்கு ஆயிரக்கானவர்கள் இரயில் விபத்துகளில் பலியாக நேருகிறது என்றும், இந்த விபத்துகளை தடுக்க இரயில்வே நிர்வாகம் தவறிவிட்டது என்றும், இந்திய அரசின் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இருப்புப் பாதைகளைச் சுற்றி சரியான வேலிகள் போடப்படாததால், ஒவ்வோர் ஆண்டும், 15,000 பேர் இரயில்களில் அடிப்பட்டு இறந்து போக நேரிடுகிறது என்று இரயில்வே பாதுகாப்பு குறித்த அந்த உயர்மட்டக் குழுவின் அறிக்கை கூறுகிறது.
இத்தகைய இறப்புக்களில் பாதி மும்பையில் ஏற்படுகின்றன என்றும், அங்கு பொதுமக்கள் இரயில் பாதைகளைக் கடந்து செல்ல போதிய வழிகள் இல்லாததே இதற்கு காரணம் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இந்திய இரயில்வேத்துறைக்கு முன்னர் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் செயற்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இவ்வறிக்கை விமர்சித்துள்ளது.
பெருமளவிலான மக்களின் உயிர்களைப் பாதுகாக்க, கூடுதலான முதலீடுகள் தேவை எனவும் அது தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.