சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுக்கிறார் ஐநா பொதுச் செயலர்
பிப்.21,2012. சரிநிகரற்ற நிலைகள், இலஞ்ச ஊழல், அடக்குமுறை, போதிய வேலைவாய்ப்பின்மைகள்
போன்றவைகளுக்கு எதிராக அண்மைக்காலங்களில் உலகம் முழுவதும் இடம்பெற்றுவரும் போராட்டங்களை
மனதிற்கொண்டு, அனைவருக்கும் மேலும் சமூக நீதி கிடைக்கும் வண்ணம் பொருளாதார வளர்ச்சி இடம்பெற
வேண்டும் என அழைப்பு விடுத்தார் ஐநா பொதுச்செயலர் பான் கி மூன். இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட
உலக சமூக நீதி நாளையொட்டி செய்தி வெளியிட்ட பொதுச்செயலர், அண்மைக்கால மக்கள் போராட்டங்களின்
மையப்பகுதியாக சமூக நீதிக்கான அழைப்பு உள்ளது என்றார். வரும் ஜூன் மாதம் ரியோ டி
ஜெனீரோவில் இடம்பெற உள்ள ஐநா கருத்தரங்கு, புதிய முன்னேற்றத் திட்டங்களை வகுத்து, வருங்காலத்திற்கான
சிறந்த பாதையை அமைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார் ஐநா பொதுச்செயலர்
பான் கி மூன்.