2012-02-21 15:08:07

இலங்கையின் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளையும் மீன்பிடிப் படகுகளையும் வழங்கியது காரித்தாஸ் அமைப்பு


பிப்.21,2012. இலங்கையின் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளையும் மீன்பிடிப் படகுகளையும் தேவையான உதவிப் பொருட்களையும் இவ்வாரத் துவக்கத்தில் வழங்கியது அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு.
கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும் நோக்குடன் 22 வீடுகளைக் கட்டி வழங்கியுள்ள அப்பகுதி கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, 50 படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் ஏனைய தேவையான கருவிகளையும் வழங்கியுள்ளது.
ஸ்வீடன் மற்றும் லக்சம்பர்க் காரித்தாஸ் அமைப்புகளின் உதவியுடன் இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் கிளிநொச்சி காரித்தாஸ் அமைப்பின் தலைவர் குரு அருளானந்தம் யாவிஸ்.
விதவைகள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்கள், பெண்குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பங்கள் என்ற அடிப்படையில் 22 குடும்பங்களுக்கு வீடுகளும் 50 குடும்பங்களுக்கு படகுகளும் ஏனைய உதவிகளும் வழங்கப்பட்டதாக குரு யாவிஸ் மேலும் கூறினார்.
ஒவ்வொரு வீட்டையும் கட்டுவதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் செலவிட்டதாகவும் ஒவ்வொரு இயந்திரப்படகின் விலை நான்கு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் எனவும் தெரிவித்தார் அவர்.
இவ்வுதவிகளை வழங்கிய விழாவில் காரித்தாஸின் இலங்கை தேசிய இயக்குனர் குரு ஜார்ஜ் சிகாமணியும் கலந்துகொண்டார்.








All the contents on this site are copyrighted ©.