புதிய கர்தினால்கள், அன்புடனும் ஆர்வத்துடனும், ஞானத்துடனும், மறைசாட்சிகளுக்குரிய துணிவுடனும்
திருஅவைக்குப் பணிபுரியுமாறு திருத்தந்தை அழைப்பு
பிப்.18,2012. அன்புடனும் ஆர்வத்துடனும், வெளிப்படையாகவும் ஆசிரியர்களின் ஞானத்துடனும்,
மேய்ப்பர்களின் சக்தி மற்றும் பலத்துடனும், மறைசாட்சிகளுக்குரிய பற்றுறுதி மற்றும் துணிவுடனும்
புதிய கர்தினால்கள் திருஅவைக்குப் பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட். ஒன்றிப்பின் காணக்கூடிய அடித்தளமாகிய பேதுருவில் வெளிப்படும் திருஅவையின்
சிறந்த பணியாளர்களாக இருக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை. கிறிஸ்து,
சிலுவையில் தம்மையே முழுவதும் கொடையாக அளித்தது, புதிய கர்தினால்களின் வாழ்வுக்கு அடித்தளமாகவும்,
பிறரன்பில் விசுவாசத்துடன் செயல்படக்கூடிய தூண்டுதலையும் வலிமையையும் கொடுப்பதாகவும்
இருக்கட்டும் எனவும் அவர் கூறினார். வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில்
22 புதிய கர்தினால்களுக்கு சிவப்புத் தொப்பியும், மோதிரமும் வழங்கி, அவர்களுக்குரிய ஆலயத்தையும்
குறித்த திருவழிபாட்டை இச்சனிக்கிழமை நிகழ்த்திய திருத்தந்தை, அத்திருவழிபாட்டில் புதிய
கர்தினால்களுக்கு ஆற்றிய பேருரையில் இவ்வாறு கூறினார். அடக்கி ஆள்தலும் சேவையும்,
தன்னலக்கோட்பாடும் பிறர்க்கென வாழும் தகைமையும், பொருள்களைக் கொண்டிருத்தலும் கொடையும்,
சுயநலமும் கைம்மாறு கருதாத தன்மையும், ஆகிய இவைகள் ஒவ்வொரு காலத்திலும் இடத்திலும் ஒன்றுக்கொன்று,
மிகவும் முரணாக அமைகின்றன என்றும் உரைத்தார் திருத்தந்தை. ஆயினும், இயேசு காட்டிய
வழி, பிறருக்குத் தொண்டு செய்யவும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமானது(மாற்.10,45),
என்றுரைத்த திருத்தந்தை, புதிய கர்தினால்களும் இயேசுவின் இவ்வழியில் நடக்கத் தூண்டப்படுகிறார்கள்
என்று கூறினார். எவ்வளவுக்குப் பணியாளராய் இருக்க முடியுமோ அவ்வளவுக்கே அதிகாரமும்
மகிமையும் வந்தடைகின்றது என்றும், மனித குலத்திற்கு முழுவதும் விசுவாசமாய் இருப்பதிலும்,
மனித குலத்தின்மீது முழுவதும் பொறுப்புடன் நடந்து கொள்வதிலும் இயேசுவின் சேவை உண்மைவடிவம்
பெற்றது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை. கிறிஸ்துவின் நற்செய்தியினால் எப்பொழுதும்
வழிநடத்தப்பட்டவர்களாய், எல்லாக் காலத்திலும் கிறிஸ்துவுக்குப் பிரமாணிக்கமுள்ளவர்களாக
வாழக் கர்தினால்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்காகச் செபிக்குமாறு விசுவாசிகளைக்
கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான
விசுவாசிகள் கலந்து கொண்ட இவ்வழிபாட்டில், புதிய கர்தினால்களுக்குரிய சிவப்புத் தொப்பி,
மோதிரம், அவர்களுக்குரிய ஆலயம் ஆகியவற்றின் அர்த்தங்களையும் விளக்கினார். “உன் பெயர்
பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்” (மத்.16,18) என்று இயேசு புனித
பேதுருவிடம் சொன்ன திருச்சொற்களுடன் இப்பேருரையைத் தொடங்கிய திருத்தந்தை, இச்சொற்கள்,
இன்றைய நிகழ்ச்சியின் திருஅவைப் பண்பை விளக்குகின்றன என்றும் கூறினார். கேரளாவின்
சீரோ-மலபார் ரீதித் திருஅவையின் தலைவரான பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, ஹாங்காங் ஆயர் John
Tong Hon உட்பட 22 பேர் இச்சனிக்கிழமையன்று புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்டனர். இஞ்ஞாயிறன்று
இப்புதிய கர்தினால்களுடன் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இப்புதிய
கர்தினால்களுள் 2 பேர் ஆசியர்கள். 7 இத்தாலியர் உட்பட 16 பேர் ஐரோப்பியர்கள்.