திருப்பீடப் பேச்சாளர் : கைதிகளுக்கு அனைத்துவிதமான மாண்புகளும் புறக்கணிக்கப்படக் கூடாது
பிப்.17,2012. Comayagua நகரின் சிறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தையொட்டி வெளியாகியுள்ள
தகவல்கள், நமது பரிவிரக்கத்தை வெளிப்படுத்துவதற்குச் சவால்களாக இருக்கின்றன என்று திருப்பீடப்
பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார். Octava Dies என்ற
வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அருள்தந்தை
லொம்பார்தி, இவ்வாரத்தில் ஹொண்டுராஸ் சிறையில் இடம் பெற்றுள்ள தீ விபத்து போன்று, அந்நாட்டில்
அண்மை ஆண்டுகளிலும் இடம் பெற்றுள்ளன என்று கூறினார். சிலே, அல்ஜீரியா, தொமினிக்கன்
குடியரசு, பிரேசில், சவுதி அரேபியா, மொராக்கோ, எல் சால்வதோர், டுனிசியா, அர்ஜென்டினா,
மெக்சிகோ ஆகிய நாடுகளின் சிறைகளிலும் தீ விபத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்று கூறினார்
அவர். கைதிகள் தவறு செய்தவர்களாய் இருந்தாலும்கூட, அவர்களுக்கு அனைத்துவிதமான மாண்புகளும்
புறக்கணிக்கப்படக் கூடாது என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, இத்தகைய மக்களை, வன்முறைச்
சூழலிலும்கூட, இழிவுபடுத்துவது, இவர்கள் சமுதாய வாழ்வில் மீண்டும் நுழைவதற்கு இயலாததாய்
ஆக்குகின்றது என்று எச்சரித்தார். தீ விபத்தில் காயமடைந்து உருக்குலைந்துள்ள இக்கைதிகள்,
கிறிஸ்துவின் திருமுகத்தை நமக்கு நினைவுபடுத்துகிறார்கள் என்றும் திருப்பீடப் பேச்சாளர்
தெரிவித்தார்.