எகிப்தில் தீக்கிரையான கிறிஸ்தவ ஆலயமும் கிறிஸ்தவர்களின் வீடுகளும்
பிப்.16,2012. எகிப்தில் Sharqia மாநிலத்தில் ஞாயிறு முதல் உருவாகியிருந்த கிறிஸ்தவ முஸ்லிம்
மோதல்களால் இத்திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றும், பல கிறிஸ்தவர்களின்
வீடுகளும் தீக்கிரையாயின. Salafi என்று அழைக்கப்படும் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவைச்
சேர்ந்த 2000க்கும் அதிகமானோர் Meet Bashar என்ற கிராமத்தில் நடத்திய வன்முறைத் தாக்குதல்களில்,
புனித மரியா மற்றும் புனித ஆப்ராம் என்ற ஆலயமும், பல கிறிஸ்தவ வீடுகளும் தீ வைத்துக்
கொளுத்தப்பட்டன. இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் அடைந்த ஒருவரது மகள் Rania Khalil என்ற
இளம்பெண் ஞாயிறு முதல் காணவில்லை என்பதால், அவரது மதமாற்றத்தைத் தடுக்க கிறிஸ்தவர்கள்
அவரை கடத்திக் கொண்டு போய்விட்டனர் என்ற தவறான வதந்தியால் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும்
இடையே மோதல்கள் உருவாகி வன்முறையாக வெடித்தன. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்களிடையே
மேற்கொள்ளப்பட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இப்புதன் முதல் அப்பகுதியில் அமைதி
திரும்பியுள்ளதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.