அருள்பணியாளர்கள் வறியோர் சார்பாகத் தங்கள் விருப்பத் தேர்வுகளை எடுக்க வேண்டும் - கர்தினால்
கிரேசியஸ்
பிப்.16,2012. இருவேறுபட்ட இந்தியாக்கள் உள்ளன, அவைகளுக்கு இடையே உறவு பாலத்தை உருவாக்குவது
அருள்பணியாளர்களின் கடமை என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ்
கூறினார். இச்செவ்வாய் முதல் வியாழன் வரை மும்பையில் நடைபெற்ற CDPI என்று அழைக்கப்படும்
மறைமாவட்டக் குருக்கள் தேசிய அவையின் பத்தாவது ஆண்டு கூட்டத்தில் திருப்பலியாற்றிய மும்பைப்
பேராயர் கர்தினால் கிரேசியஸ், வறியோர் சார்பாகத் தங்கள் விருப்பத் தேர்வுகளை எடுப்பதற்கு
அருள்பணியாளர்களைக் கேட்டுக் கொண்டார். இந்தியா அடைந்துள்ள பல முன்னேற்றங்கள் பெரும்பாலும்
செல்வந்தரையே செழிக்கச் செய்துள்ளது என்றும், ஏழைகளோ அடிப்படைத் தேவைகளுக்கும் போராட
வேண்டியுள்ளதென்றும் கர்தினால் கிரேசியஸ் தன் மறையுரையில் சுட்டிக் காட்டினார். "இந்தியச்
சூழலுக்கு ஏற்ப புதிய நற்செய்திப் பணியின் பொருளும், செயல்பாடும்" என்ற மையக் கருத்துடன்
நடைபெற்ற இந்த மூன்று நாள் ஆண்டுகூட்டத்தில் கலந்து கொண்ட அருள்பணியாளர்கள், இக்கூட்டத்தில்
இருந்து செல்லும்போது, புதிய எண்ணங்களுடனும், புதிய அர்ப்பனத்துடனும் செல்ல வேண்டும்
என்று கர்தினால் வேண்டுகோள் விடுத்தார். திருஅவையில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும்
பொது நிலையினரை பிரச்சனைகளாகப் பார்க்காமல், வாய்ப்புக்களாகக் கருதி, அவர்களுடன் இணைந்து
இறையரசை கட்டியெழுப்ப வேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அருள்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.