2012-02-15 15:38:22

நாட்டின் ஊழலைக் களைய, அருள்பணியாளர்கள் தங்கள் சொந்த வாழ்விலிருந்து ஆரம்பிக்க வேண்டும் - மைசூர் ஆயர்


பிப்.15,2012. நற்செய்திப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும், சமுதாயத்தில் உள்ள ஊழல்களை ஒழிப்பதாக இருந்தாலும், இந்திய அருள்பணியாளர்கள் முதலில் இவற்றைத் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
CDPI என்று அழைக்கப்படும் மறைமாவட்டக் குருக்கள் தேசிய அவையின் பத்தாவது பொதுக் கூட்டத்தை இச்செவ்வாயன்று மும்பையில் துவக்கிவைத்துப் பேசிய மைசூர் ஆயர் தாமஸ் வாழப்பில்லி இவ்வாறு கூறினார்.
நாட்டில் நிலவும் ஊழல்களைக் குறித்து பேசும்போது, பொதுவாக அரசியலில் உள்ளவர்களையும் மற்றவர்களையுமே அதிகம் நினைத்துப் பார்க்கிறோம், ஆனால், தனக்கு குறிக்கப்பட்டுள்ள பணிகளைச் சரிவர செய்யாத ஆசிரியர்கள், மருத்துவர்கள், திருப்பணியாளர்கள் அனைவருமே ஊழல் பரவுவதற்கு வழியாக அமைகின்றனர் என்று ஆயர் வாழப்பில்லி எடுத்துரைத்தார்.
நாட்டின் ஊழலைக் களைய ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வாழ்விலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் வாழப்பில்லி, நற்செய்திப் பணியும் இதைப்போலவே ஒவ்வொரு திருப்பணியாளரின் தனிப்பட்ட வாழ்விலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்று கூறினார்.
இச்செவ்வாயன்று ஆரம்பமான மறைமாவட்டக் குருக்கள் தேசிய அவை கூட்டம் இவ்வியாழனன்று நிறைவு பெறுகிறது.







All the contents on this site are copyrighted ©.