பிப் 15, 2012. இரு வார இறுதிகளின் பனிப்பொழிவிற்குப் பின் உரோம் நகரம் இயல்பு நிலைக்குத்
திரும்பி வந்து கொண்டிருக்கிறது. உள்ளிருந்துப் பார்த்தால் வெயில் உக்கிரமாக அடிப்பது
போல் தோன்றினாலும், தெருவில் இறங்கி விட்டாலோ குளிர்ந்த காற்று முகத்தை அறைந்துகொண்டுச்
செல்கிறது. கடந்த வார இறுதியில் பெய்த பனிப்பொழிவின் மிச்சங்கள் இன்னும் நடைபாதையோரங்களில்
காணக்கிடக்கின்றன. கடுமையான குளிரை இன்னும் அனுபவித்து வரும் உரோம் நகரில் இப்புதனன்று
திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகத்திற்கு செவிமடுக்க, திருப்பயணிகளின் கூட்டம் திருத்தந்தை
ஆறாம் பவுல் மண்டபத்தை நிறைத்திருக்க, கிறிஸ்தவ செபம் குறித்த தன் சிந்தனைகளைத் தொடர்ந்தார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையின் தொடர்ச்சியாக,
சிலுவையில் தொங்கியபோது இயேசு செபித்த செபம் குறித்து மீண்டுமொருமுறை இன்று, நோக்குவோம்
என இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார் பாப்பிறை. சிலுவையில் அறையுண்ட
நமதாண்டவரின் கடைசி மூன்று வார்த்தைகளைக் குறிப்பிடுகிறார் புனித லூக்கா. "தந்தையே, இவர்களை
மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என தன்னைத்
துன்புறுத்துபவர்களுக்காக தன் செபத்தில் வேண்டுவதன் வழி, பாவம் நிறைந்த மனித குலத்துடன்
ஒப்புரவாகும் தன் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறார் இயேசு. நல்ல கள்ளனை நோக்கி,
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என் உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" எனக்
கூறியதன் வழி, மனம் திருந்தி இறைவன் மீது முழு விசுவாசம் கொள்ளும் அனைவருக்குமான உறுதியான
நம்பிக்கையைத் தருகிறார் இயேசு. "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என உரத்த
குரலில் இயேசு அறிக்கையிட்டது, இறைவிருப்பத்திற்கு முழு நம்பிக்கையுடன் தன்னையே அவர்
கையளித்ததை வெளிப்படுத்தி நிற்கிறது. தந்தையுடன் இயேசு கொண்டிருந்த சிறப்பு உறவில் பிறந்த
இந்த முழுமையாய் கையளிக்கும் மனநிலையே அவரின் செப வாழ்வை வடிவமைத்தது. வானுலகில் நம்மை
அரவணைக்க உள்ள இறைவனின் கரங்கள் நம் இவ்வுலக வாழ்விலும் நம் துன்பங்களைத் தாங்கும் பலத்தைத்
தந்து காக்கின்றன என்ற முழு நம்பிக்கையுடன் அக்கரங்களில் நம்மை முழுமையாக ஒப்படைப்பதுடன்,
நம் எதிரிகளை மன்னித்து, அன்பு கூர்ந்து அவர்களின் மனமாற்றத்திற்காக செபிக்க வேண்டும்
என இயேசு சிலுவையிலிருந்து நமக்குக் கற்றுத்தருகிறார். இவ்வாறு கிறிஸ்தவ செபம் குறித்த
தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும்
அளித்தார்.