2012-02-15 15:32:01

அனைத்து நாடுகளிலும் மதச்சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு திருப்பீடமும், பிரித்தானிய அரசும் இணைந்து பணியாற்றும்


பிப்.15,2012. உலகின் அனைத்து நாடுகளிலும் மதச்சுதந்திரம் ஓர் அடிப்படை மனித உரிமையாக உறுதி பெறுவதற்கு இணைந்து பணியாற்றும் ஓர் ஒப்பந்தத்தை திருப்பீடமும், பிரித்தானிய அரசும் இப்புதனன்று இணைந்து வெளியிட்டுள்ளது.
திருப்பீடமும், பிரித்தானிய அரசும் அதிகாரப்பூர்வமான உறவுகளைப் புதிப்பித்துக்கொண்டதன் 30ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை இப்புதன் பொது மறைபோதகத்திற்குப் பின் திருத்தந்தை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்குப் பின், இப்பிரதிநிதிகள் குழு திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே, மற்றும் திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர் பேராயர் Dominique Mamberti ஆகியோரையும் சந்தித்தது.
வருகிற ஜூன் மாதம் ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவிருக்கும் ஐ.நா.உலகக் கருத்தரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக திருப்பீடமும், பிரித்தானிய அரசும் இணைந்து பாடுபடும் என்றும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.
பல்வேறு நாடுகளில் உருவாகியுள்ள நிலையற்ற தன்மையை அகற்றும் வழிகள், ஆயுதக்களைவு, மனித உயிர்களை மதித்து மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகள் என்ற பல்வேறு செயல்பாடுகளில் இணைந்து பணியாற்றவும் முன்வருவதாக இவ்வறிக்கை உறுதி கூறுகிறது.
இங்கிலாந்து அரசி பதவியேற்ற வைரவிழா ஆண்டில் லண்டன் மாநகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பற்றியும் எடுத்துரைக்கும் இவ்வறிக்கை, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உலகறியச் செய்ய முனையும் பல நல்ல மதிப்பீடுகளை உலகில் வளர்க்க திருப்பீடமும், பிரித்தானிய அரசும் முயற்சி செய்யும் என்று உறுதி கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.