சிரியாவில் வன்முறை முடிவுக்கு வர திருத்தந்தை அழைப்பு
பிப்.13,2012. சிரியாவில் இடம் பெறும் இரத்தம் சிந்துதலும், வன்முறையும் முடிவுக்குக்
கொண்டுவரப்படுமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை. அத்துடன்,
உரையாடல், ஒப்புரவு மற்றும் அமைதிக்கான அர்ப்பணத்தின் பாதையைத் தேர்ந்து கொள்ளுமாறும்
கேட்டுக் கொண்ட திருத்தந்தை, சிரிய மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், சர்வதேச சமுதாயத்தின்
வேண்டுகோளுக்கும் செவிமடுக்குமாறு சிரிய அரசை வலியுறுத்தினார். சிரியாவில் 11 மாதங்களுக்கு
முன்னர் கலவரங்கள் தொடங்கிய போது, தேர்தல் மற்றும் அரசியலில் சில சீர்திருத்தங்கள் கொண்டு
வருவதாக அந்நாட்டு அரசு வாக்குறுதி அளித்தது. ஆயினும், அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால்
மீண்டும் சிரியாவில் வன்முறைகள் தொடங்கியுள்ளன. கடந்த வாரத்தில் இரண்டு வாகன குண்டு
வெடிப்புகள் இடம் பெற்றதில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கான
அப்பாவி மக்களும் படைவீரர்களும் காயமடைந்துள்ளனர். சிரியாவில் அதிகரித்து வரும் வன்முறைகளை
மிகுந்த கவலையோடு கவனித்து வருவதாகவும், இதில் பலியான சிறார் உட்பட அனைவருக்காகவும் தான்
செபிப்பதாகவும் திருத்தந்தை கூறினார்.