திருத்தந்தை : நாசரேத்தூர் இயேசுவின் வரலாறு இன்றைய நமது விசுவாசத்திற்கு முக்கியமானது
பிப்.10,2012. தனது இறுதி முடிவின் நிறைவை அடைவதற்கு, மனிதரின் வாழ்வு நற்செய்தியின்
அனைத்துக் கூறுகளினாலும் வழிநடத்தப்பட்டு, மாற்றம் பெற முடியும் என்ற நம்பிக்கையில்,
நற்செய்தி அறிவிக்கும் கலாச்சாரம் உருவாக்கப்பட்டது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
கூறினார். இத்தாலிய ஆயர் பேரவையின் கலாச்சார ஆணையம் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள மூன்று
நாள் கருத்தரங்கிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு கூறினார். உலகின் பல்வேறு
நாடுகளில் இயேசுவின் பெயரால் இன்றும் பல விசுவாசிகள் துன்பங்களையும் அடக்குமுறைகளையும்
எதிர்நோக்கும்வேளை, நாசரேத்தூர் இயேசுவின் வரலாறு, கடந்த காலத்தோடு முடிந்துவிட்டதாகக்
கருதப்படக் கூடாது, மாறாக அது இன்றைய நமது விசுவாசத்திற்கும் முக்கியமானது என்றும் திருத்தந்தை
கூறினார். இயேசு, மனித வரலாற்றில் என்றென்றும் நுழைந்து, அதன் அழகோடும் வல்லமையோடும்
தொடர்ந்து வாழ்கிறார், பலவீனமானப் பண்பைக் கொண்ட அதற்கு எப்பொழுதும் தூய்மைப்படுத்துதல்
அவசியம் என்றும் திருத்தந்தை கூறினார். நாசரேத்தூர் இயேசு என்ற தலைப்பில் தான் வெளியிட்டுள்ள
இரண்டு நூல்கள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, ஞானம் மற்றும் அன்பின் கதவுக்குத்
திறவுகோலாக இருப்பவர் இயேசு என்றும் தெரிவித்துள்ளார். “இயேசு, நமது காலத்தவர்” என்ற
தலைப்பில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.