2012-02-07 16:08:42

ஆப்ரிக்காவில் இரண்டாயிரம் சமூகங்கள், பெண்களின் பிறப்புறுப்பை முடமாக்கும் நடவடிக்கையைக் கைவிட்டுள்ளன - ஐ.நா. அறிக்கை


பிப்.07,2012. ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் சமூகங்கள், பெண்குழந்தைகளின் பிறப்புறுப்பை முடமாக்கும் நடவடிக்கையைக் கைவிட்டன என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஐ.நா.வின் மக்கள்தொகை நிதி அமைப்பு வெளியிட்ட இவ்வறிக்கையில், ஆப்ரிக்காவில் இடம் பெறும் இந்நடவடிக்கை, எல்லா இடங்களிலும் முற்றாக நிறுத்தப்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையைக் கைவிடும் சமூகங்களின் எண்ணிக்கை அண்மை சில ஆண்டுகளில் 8,000த்துக்கு அதிகமாகியுள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
13 கோடி முதல் 14 கோடி வரையிலான சிறுமிகளும் பெண்களும் இதுவரை இச்செயலுக்கு உள்ளாகியுள்ளனர். இப்பழக்கம் பெரும்பாலும் ஆப்ரிக்காவில் இடம் பெறுகின்றது. சில ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இப்பழக்கம் நடைபெறுகின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
தினமும் 8,000 சிறுமிகள் என ஒவ்வோர் ஆண்டும் சுமார் 30 இலட்சம் சிறுமிகளும் பெண்களும் பிறப்புறுப்பு முடமாக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என ஐ.நா. கூறியது.







All the contents on this site are copyrighted ©.