2012-02-06 15:29:38

கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறும் முக்கியமானதொரு கருத்தரங்கு


பிப்.06,2012. பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்களைக் குறித்து, ஆசியத் தலத்திருஅவைகளில் புகார்கள் எழும்போது அவற்றை எதிர்கொள்ளும் வழிகள் உரோமையில் ஆரம்பமாகியுள்ள் ஒரு கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று இயேசுசபை அருள்தந்தை Hans Zollner கூறினார்.
உரோமையில் இயேசு சபையினர் நடத்தும் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இத்திங்கள் முதல் வியாழன் வரை 'நலமடைதல் மற்றும் புதிய மாற்றங்கள் நோக்கி', என்ற தலைப்பில் நடைபெறும் திருஅவையின் கருத்தரங்கைக் குறித்து கருத்தரங்கின் அமைப்பாளர்களில் ஒருவரான அருள்தந்தை Zollner இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் 110 மறைமாவட்டங்களின் பிரதிநிதிகள், அகில உலக துறவியர் சபைகளின் 30 தலைவர்கள் உட்பட 200க்கும் அதிகமான திருஅவைத் தலைவர்கள் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கிற்கு திருப்பீடத்தின் முழு ஆதரவும் உள்ளது என்று வத்திக்கான் பேச்சாளர் அருள்தந்தை பெதேரிகோ லோம்பார்தி கூறியுள்ளார்.
மணிலா உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Luis Antonio Tagle, 'ஆசியாவில் குருக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றுவார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளநலரீதியாகவும் இந்த வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் நலம் பெறுவதற்கான வழிமுறைகள் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.