பிளாஸ்டிக் பயமுறுத்தும் பூதம் கடலையும் காற்றையும் மண்ணையும் விண்ணையும் என ஐம்பூதங்களையும்
அச்சுறுத்தும் ஆறாவது பூதம்
பிளாஸ்டிக் சாகாவரம் பெற்ற பூதம் வெயிலில்
காய்ந்தாலும் மழையில் நனைந்தாலும் மண்ணோடு மக்கி மடியாது அழியவே அழியாது ஆறறிவையும்
ஐந்தறிவையும் ஆறாத்துயரில் ஆழ்த்தும் பகைவன் இது.
பிளாஸ்டிக் உயிர்க்கொல்லி
பூதம் காரீயம், காட்மீயம் கலந்த பொம்மையாக குழந்தைகளின் உயிருக்கு உலை
வைக்கும் எமன் காரீயமாக நரம்பு மண்டலத்தைத் தாக்கி குழந்தைகளின் மனவளர்ச்சி குன்றச்செய்யும்
குற்றவாளி.
பெருமழையில் சாக்கடைகள் அடைப்பு வீட்டுக்குள் தண்ணீர் தண்ணீர்
எனக் கண்ணீர் வடிக்கும் மனிதர் ஏன் புரிந்துகொள்வதில்லை தாங்கள் வீசியெறிந்த
பிளாஸ்டிக் பைகள்தான் காரணம் என்று.
எத்தனை அடைப்புகள் எத்தனை புற்று நோய்கள்,
எத்தனை பேரிடர்கள் வந்தாலும் திருந்தாத மனிதர் இருக்கும்வரை பிளாஸ்டிக் காட்டில்
மழைதான்!