அன்னை தெரேசாவோ, கிறிஸ்தவ கல்விக் கூடங்களோ என்னை ஒருபோதும் மதம் மாற்ற முயன்றதில்லை
- இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர்
பிப்.06,2012. அருளாளர் அன்னை தெரேசா பணிவு மிகுந்த சேவையாலும், எடுத்துக்காட்டான வாழ்வாலும்
கிறிஸ்துவ மறையை வெளிப்படுத்தினாரே ஒழிய, தன் மறை மற்ற மறைகளைவிட உயர்ந்ததென்று எப்போதும்
சொன்னதில்லை என்று இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறினார். பெங்களூருவில்
தற்போது நடைபெற்றுவரும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 30வது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய
நவீன் சாவ்லா, தான் ஒரு கிறிஸ்தவர் அல்லாதவர் என்றாலும், அன்னை தெரேசாவோ அல்லது தான்
பயின்ற கிறிஸ்தவ கல்விக் கூடங்களோ தன்னை ஒருபோதும் மதம் மாற்ற முயன்றதில்லை என்பதை வலியுறுத்திக்
கூறினார். இந்தியாவில் பிறந்த அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை உள்ளதென்பதைச் சுட்டிக்
காட்டிப் பேசிய முன்னாள் தேர்தல் ஆணையர், இந்தியச் சட்டங்கள் அனைவரையும் உள்ளடக்கும்
ஒரு சிறந்த சட்ட அமைப்பு என்பதையும் எடுத்துரைத்தார். இன்றையச் சூழலில் திருஅவை சந்தித்து
வரும் பல்வேறு எதிர்ப்புக்களையும் தாண்டி, கத்தோலிக்க கல்வி நிறுவனங்களும் நலவாழ்வு நிறுவனங்களும்
தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற சிறப்பான வேண்டுகோளை சாவ்லா ஆயர்கள் கூட்டத்தில் முன்
வைத்தார். கத்தோலிக்கத் திருஅவையினர் இந்திய அரசின் பல்வேறு துறைகளுடன் பேச்சு வார்த்தைகள்
மேற்கொண்டு தங்களது உரிமைகளையும் கோரிக்கைகளையும் பெறவேண்டும் என்று சாவ்லா வலியுறுத்தினார். சமுதாயப்
பணிகளில் ஈடுபட்ட அன்னை தெரேசா பல்வேறு ஏளனங்களையும் சந்தித்தார் என்பதை நினைவுபடுத்திய
நவீன் சாவ்லா, திரு அவையின் சமூகப் பணியாளர்களும் அன்னையின் வழியைப் பின்பற்றி, தங்கள்
நற்செயல்களைத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.