ஊழலுக்கு எதிரான போராட்டம், நம்பிக்கையின் அடையாளம் - இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர்
பிப்.04,2012. இந்தியாவில் ஊழலை வேரோடு பிடுங்கி எறிய வேண்டுமென்று பொது மக்கள் மிகுந்த
உறுதியுடன் வலியுறுத்தி வருவது, நம்பிக்கையின் அடையாளமாகத் தெரிகின்றது என்று இந்திய
ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் ஆல்பர்ட் டி சூசா கூறினார். பெங்களூருவில் நடைபெற்று
வரும் இந்திய ஆயர் பேரவையின் 30வது பொதுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்த போது இவ்வாறு
கூறினார் ஆக்ரா பேராயர் ஆல்பர்ட் டி சூசா. இந்தியாவை அண்மை ஆண்டுகளில் உலுக்கியுள்ள
ஊழல்களும் துர்மாதிரிகைகளும், பொது மக்கள் மத்தியில், அரசியல்வாதிகள் மீது நம்பகத்தன்மையைக்
குறைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கும்
இத்தகைய சமூக மற்றும் அரசியல் விவகாரங்களுக்குத் திருஅவையும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
என்று கூறிய பேராயர் டி சூசா, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளைக் காப்பதற்காகக் கடந்த
இரண்டு ஆண்டுகளில் திருஅவை எடுத்த செயல்பாடுகளையும் சுட்டிக் காட்டினார். 170 ஆயர்கள்
கலந்து கொள்ளும் இக்கூட்டம், இம்மாதம் 8ம் தேதி முடிவடையும்