பிப்.02,2012. கொழும்பில் பிப்ரவரி 1 முதல் 3ம் தேதி வரை நடைபெற்றுவரும் பன்னாட்டு தேயிலை
மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த சுமார் 170 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். ‘உலகிலேயே
தலைசிறந்த தேயிலை இலங்கையில் தான் கிடைக்கிறது’ என்பதை நிருபிப்பது தான் இந்த பன்னாட்டு
மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று இம்மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் மைக்கல் ஜேடி
சொய்சா பிபிசி ஊடகத்திடம் கூறினார். கடந்த ஆண்டு தேயிலை விற்பனையில் இலங்கை 1.5 பில்லியன்
டாலர்கள் அளவுக்கு வருமானம் ஈட்டியதாகக் கூறிய ஜேடி சொய்சா, பல ரகங்களில் பல சுவைகளில்
கிடைக்கும் இலங்கைத் தேயிலைக்கு உலகச் சந்தையில் இருக்கும் தேவையை இன்னும் அதிகரிப்பதற்கு
இந்த பன்னாட்டு மாநாடு உதவும் என்று சொய்சா மேலும் தெரிவித்தார். நிலைமை இப்படி இருக்க,
மறுபுறம் இலங்கை அரசின் இந்த வருமானத்திற்குக் காரணமாக இருக்கின்ற தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்
பல ஆண்டுகளாக குடியிருப்பு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உரிய முறையில்
உறுதிப்படுத்தப்படாத நிலையில் பின்தங்கிய நிலையில் இருந்துவருகின்றார்கள் என்று பிபிசி
சுட்டிக்காட்டுகிறது.