இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு விசுவாச அட்டைகள்
பிப்.02,2012. நமது அடையாளங்களை உறுதிப்படுத்தும் பல்வேறு அட்டைகளை நாம் எப்போதும் சுமப்பதுபோல்,
நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தும் ஓர் அடையாள அட்டையையும் நாம் சுமக்க வேண்டும் என்று
இங்கிலாந்து ஆயர் Kieran Conry கூறினார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்திருக்கும்
விசுவாச ஆண்டு 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் துவங்கவிருப்பதால், தங்கள் விசுவாசத்தை
அறிக்கையிடும் ஆறு அம்சங்கள் அடங்கிய ஓர் அட்டையை கத்தோலிக்கர்கள் எப்போதும் தங்களுடனேயே
வைத்திருக்கும்படி இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று ஆயர் Conry விளக்கம் அளித்தார். இங்கிலாந்து
மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள 24 கத்தோலிக்க மறைமாவட்டங்களில் வாழும் கத்தோலிக்கர்கள்
தங்கள் பைகளில் சுமந்து செல்லும் வண்ணம் 10 இலட்சம் அட்டைகளை வழங்க இங்கிலாந்தின் நற்செய்திப்
பணிக் குழு தீர்மானித்துள்ளது என்று ஆயர் Conry கூறினார். பிப்ரவரி மற்றும் மார்ச்
மாதங்களில் இந்த 10 இலட்சம் அட்டைகளையும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள
மறைமாவட்டங்களில் வழங்கத் தீர்மானித்திருப்பதாக ICN கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.