பிப் 01, 2012. இத்தாலியின் பெரும்பகுதி பனியால் மூடியிருக்க, உரோம் நகரில் செவ்வாய்
மாலையில் பெய்த மழை இன்னும் சிறிய அளவிலும், பெரியதாகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,
வத்திக்கானிலுள்ள திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் குழுமியிருந்த திருப்பயணிகள் மற்றும்
சுற்றலாப் பயணிகளுக்கு, கிறிஸ்தவ செபம் குறித்த தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கினார்
திருத்தந்தை. திருத்தந்தை இப்புதனன்று வழங்கிய புதன் பொதுமறைபோதகம், இயேசு தன் இறுதி
இரவு உணவிற்கு பின் கெத்சமனி ஒலிவத் தோட்டத்தில் மேற்கொண்ட செபம் பற்றியதாக இருந்தது.
தன் சாவை எதிர்கொள்ளவிருக்கும் இவ்வேளையில், தந்தையுடனான முழு ஒன்றிப்பில் தனியாகச் செபிக்கிறார்
மனுமகனாம் இயேசு. தன் சீடர்கள் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் தன்னருகிலிருக்கவும்
அவர் ஆவல் கொள்கிறார். அங்கு இவர்களின் இருப்பு, சிலுவைப்பாதையின் போது அனைத்துச்சீடர்களும்
இயேசுவின் அருகில் இருப்பதற்கான அழைப்பாக உள்ளது. இயேசு இங்கு செபித்த செபம், மரணத்தின்
முன்னால் மனித பயத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், தந்தையின் விருப்பத்திற்கு முழுமையாக
கீழ்ப்படிவதையும் காட்டி நிற்கின்றது. "என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்"
என்ற இயேசுவின் வார்த்தைகள், இறைவிருப்பத்திற்கு நாம் முழுமையாக நம்மையே கையளிப்பதன்
வழியாகவே மனிதத்துவத்தின் முழுமையைப் பெறமுடியும் என்பதை நமக்குக் கற்பிக்கின்றது. தந்தையாம்
இறைவனுக்கு இயேசு 'ஆம்' என உரைத்ததிலேயே ஆதாமின் பாவம் மீட்புப்பெற்று, மனித குலம் உண்மை
வி்டுதலையை அடைந்தது. அதுவே இறைவனின் குழந்தைகள் எனும் சுதந்திரம். நமக்கும் நம் வாழ்வுக்குமான
இறைவிருப்பத்தை சிறந்த முறையில் கண்டுகொள்ளவும், 'உம்முடைய திருவுளம் விண்ணகத்தில் செய்யப்படுவது
போல மண்ணகத்திலும் செய்யப்படுவதாக' என்ற தினசரி விண்ணப்பம் பலம்பெறவும், இயேசுவின் கெத்சமனி
தோட்ட செபம் குறித்த நம் தியானம் உதவுவதாக. இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய
திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.