சன.31,2012. திருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பதால் மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள
சீனக் கத்தோலிக்கத் திருஅவையின் ஐந்து குருக்கள் இத்திங்களன்று சீன மங்கோலிய எல்லைக்கருகே
காவல்துறையால் கைது செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி திருஅவை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. சீனாவின் Suiyuan மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் ஐந்து பேரும் ஒரு
பொதுநிலையினரின் வீட்டில் கூடி, குருக்களின் பணியிட மாற்றங்கள் குறித்து விவாதித்துக்
கொண்டிருந்தபோது அங்கு புகுந்த 30 காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து, மறைவான இடத்தில்
சிறை வைத்துள்ளனர். Erenhot என்ற நகரில் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரில் ஒருவர்
Suiyuan மறைமாவட்ட நிர்வாகி, இன்னொருவர் குருமட அதிபர், மற்ற மூவரும் பங்கு குருக்களாவர். Suiyuan
மறைமாவட்டத்தில் அரசின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ சபையில் சேராமல் திருத்தந்தைக்கு விசுவாசமாக
இருந்து பணியாற்றும் 30 குருக்களுள் தற்போது 5 பேர் அரசால் கைது செய்யப்பட்டுள்ளது சீனக்
கத்தோலிக்கரிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.