கிறிஸ்தவர்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும் என வாக்குறுதியளித்துள்ளார் கர்நாடக
முதல்வர்
சன.31,2012. 2012-13ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கு அதிக அளவில் நிதி
ஒதுக்கப்படும் என இஞ்ஞாயிறன்று வாக்குறுதியளித்தார் கர்நாடக முதல்வர் சதானந்த கௌடா. 2011-12ம்
நிதியாண்டில் கிறிஸ்தவ வளர்ச்சிப் பணி அவைக்கென ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாயில் 35 கோடி
தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதியுள்ளது அடுத்த இரண்டு மாதங்களில் வழங்கப்படும்
எனவும் உரைத்த கர்நாடக முதல்வர், 2012-13ம் நிதி ஆண்டில் இந்த ஒதுக்கீடு இன்னும் அதிகமாக
இருக்கும் எனவும் தெரிவித்தார். இதற்கிடையே, அரசு வழங்கும் இந்நிதி ஒதுக்கீடு கிறிஸ்தவ
சமூகத்தை விலைக்கு வாங்கும் நோக்கமுடையதாக இருக்கக்கூடாது, ஏனெனில் இதைவிட அதிக அளவு
தொகையை, கர்நாடகாவில் சமூகப் பணிகளுக்கென கிறிஸ்தவ சபைகள் செலவழிக்கின்றன என்றார் கிறிஸ்தவ
சமூகக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஜோசப் டயஸ். இத்தகைய சிறு சலுகைகள் வழங்கப்படுவதை
விட கர்நாடக கிறிஸ்தவர்களின் உரிமைகள் மதிக்கப்பட்டு அவர்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்படவேண்டும்
எனவும் கேட்டுக்கொண்டார் அவர்.