2012-01-28 15:56:08

லிபியச் சிறைகளில் சித்ரவதைகள்


சன.28,2012. லிபியச் சிறைகளிலுள்ள முன்னாள் அதிபர் கடாஃபியின் ஆதரவாளர்கள் சித்ரவதைப்படுத்தப்படுவதாகப் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று பிபிசி அறிவித்தது.
மேலும், லிபியாவில் செயல்படுகின்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஆயுதக்குழுக்கள் அங்கு அமைதியின்மையை அதிகரிக்கச் செய்திருப்பதுடன், சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கான மக்களைத் தடுப்புக்காவல் முகாம்களில் வைத்திருப்பதாக ஐ.நா.வின் லிபியாவுக்கான தூதர் இயான் மார்ட்டின் கூறியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றிய இயான் மார்ட்டின், அண்மையில் பானி வாலிட் நகரில் நடந்த மோதல்களும், பென்காசி நகரில் காணப்படுகின்ற அமைதியின்மையும், இந்த ஆயுதக்குழுக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பில் அரசின் இயலாமையைக் கோடிட்டுக் காட்டுகின்றன என்று கூறினார்.
அதேவேளை, கடாபியின் முன்னாள் ஆதரவாளர்கள் ஆயுதக் குழுக்களால் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையும் கூறியுள்ளார்.
''2011ம் ஆண்டின் மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரை 60 இடங்களில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8,500 பேரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருப்போரில் பெரும்பான்மையானவர்கள் கடாஃபியின் ஆதரவாளர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள்.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.