சன.28,2012. இலங்கையில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையேயுள்ள வர்த்தகப் பற்றாக்குறை,
இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2010ம்
ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2011 ம் ஆண்டு இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை
238 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது. இலங்கையின்
பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் இது ஓர் அபாயகரமான நிலையையே காட்டுகிறது என்று பொருளாதார
ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பற்றாக்குறை குறுகிய காலத்தில் இரண்டு மடங்குக்கும்
மேலாக அதிகரிப்பது ஆரோக்கியமான பொருளாதார நிலையாகக் கருத முடியாது எனவும் அவர்கள் கூறுகிறார்கள். சர்வதேச
அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதும், நாட்டில் நடைபெற்று வரும் பொருளாதார மேம்பாட்டுக்கு
கூடுதலாக இறக்குமதிகளைச் செய்ய வேண்டியுள்ளதும், இந்த வர்த்தகப் பற்றக்குறைக்கு ஒரு முக்கிய
காரணம் என இலங்கை அரசு கூறுகிறது.