2012-01-27 15:36:03

திருத்தந்தை : விசுவாசத்தைப் புதுப்பித்தல் இன்றையத் திருஅவையின் பணியில் முக்கியத்துவம் பெற வேண்டும்


சன.27,2012. எரிபொருள் இல்லாதது போல அணையும் சுடர் போன்று, இன்று உலகின் பல பாகங்களில் வசுவாசம் அழியக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் 70 பிரதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, விசுவாசத்தைப் புதுப்பித்தல் இன்றையத் திருஅவையின் பணியில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றார்.
இதற்கு விசுவாச ஆண்டு உதவியாக இருக்கும் என்ற திருத்தந்தை, கடவுள் மீண்டும் இவ்வுலகில் பிரசன்னமாய் இருக்கவும், உலகம் முடிவுவரை நம்மை அன்பு செய்யும் கடவுளில் நம்பிக்கை வைக்கும் விசுவாசத்தை மக்கள் அடையவும், விசுவாச ஆண்டு, இறைமக்களின் அனைத்துப் பிரிவினரின் ஒத்துழைப்போடு முயற்சிக்கும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்துக்கான கருப்பொருளும் இந்தப் பணியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலில் சில நல்ல பலன்கள் கிடைத்திருப்பதையும் சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.