2012-01-25 15:43:09

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


சன 25, 2012. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் இக்காலம், இத்தாலிக்கும் குளிர் காலமாக இருக்கும் நிலையில், உரோம் நகரில் வழக்கமான குளிர் இல்லையெனினும் பிரகாசமான சூரிய ஒளியின் மத்தியிலும் வாடைக்காற்று வீசி, குளிரின் தாக்கத்தை தந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாக, திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்திலேயே திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவ செபம் குறித்த தன் சிந்தனைகளைத் தொடர்ந்தார்.
இறுதி இரவு உணவின் போது இயேசு வழங்கிய குருத்துவச் செபம் குறித்து இன்று நோக்குவோம். Yom Kippur எனும் யூதர்களின் பரிகாரத் திருவிழா பின்னணியில், குருவும் பலிப்பொருளுமான இயேசு, தான் ஒப்புரவுப் பலியாகும் வேளையில் தந்தை தன்னை மகிமைப்படுத்துவாராக எனச் செபிக்கிறார். தன் சீடர்களைத் தனியாக எடுத்து அவர்களை இவ்வுலகில் தன் பணியைத் தொடர்ந்து நடத்த அனுப்பும் வண்ணம், அவர்களைத் திருநிலைப்படுத்த தந்தையிடம் வேண்டுகிறார் இயேசு. திருத்தூதர்களின் போதனை வழி தன் மேல் விசுவாசம் கொள்ளும் அனைவருக்கும் ஒன்றிப்பு எனும் கொடை வழங்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறார் இயேசு. ஆகவே, அவரின் குருத்துவ செபமானது, திருச்சபையையும், சீடர் சமூகத்தையும் நிறுவிய ஒன்றாக நோக்கப்படலாம். இந்தச் சீடர் சமூகம், இயேசுவிலான விசுவாசத்தின் வழி ஒரே குடும்பமாக மாற்றப்பட்டு அவரின் மீட்புப் பணியில் பங்கு பெறுகிறது. ஆண்டவராம் இயேசுவின் குருத்துவச் செபத்தை தியானிக்கும் வேளையில், நாம் நம் திருமுழுக்குத் திருநிலைப்பாட்டில் வளரவும், இந்த உலகிற்கும் நம் அயலாருக்குமான தேவைகளுக்கென நம் செபங்களைத் திறக்கவும் உதவும் அருளைத் தந்தையாம் இறைவனிடம் வேண்டுவோம். கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் நாம் செய்தது போல், கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் அனைவரிடையேயான கண்ணால் காணக்கூடிய ஒன்றிப்பு எனும் கொடைக்காகச் செபிப்போம். இந்த ஒன்றிப்பைக் காணும் இவ்வுலகம் மனுமகனிலும் அவரை அனுப்பிய தந்தையிலும் விசுவாசம் கொள்ளும்.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.