2012-01-25 16:14:00

இக்கால உலகின் பிரச்சனைகளுக்குப் பொதுநிலையினர் இயக்கங்கள் பதில் சொல்கின்றன – வத்திக்கான் அதிகாரி


சன.25,2012. கத்தோலிக்கத் திருஅவையில் செயல்படும் பொதுநிலை விசுவாசிகளின் இயக்கங்கள், திருஅவைக்குக் கொடையாகவும், நவீன சமூதாயம் முன்வைக்கும் இன்னல்களுக்குப் பதில் சொல்வதாயும் இருக்கின்றன என்று திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Stanislaw Rylko தெரிவித்தார்.
திருஅவையில் செயல்பட்டு வரும் பொதுநிலையினர் இயக்கங்களும், புதிய சமூகங்களும் இக்காலத்திய நமது திருஅவைக்கு இவ்வுலகம் முன்வைக்கும் சவால்களுக்குத், தூய ஆவியின் காலத்திற்கேற்றப் பதிலாக இருக்கின்றன என்றும் கர்தினால் Rylko கூறினார்.
இஸ்பெயினில் 1944ம் ஆண்டு தொடங்கப்பட்ட Cursillo என்ற பொதுநிலையினர் இயக்கம் நடத்திய ஆயிரமாவது தியானத்தில் கோர்தோபா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் Rylko, இவ்வாறு கூறினார்.
உண்மையான புனிதக் கிறிஸ்தவர்கள் இவ்வுலகிற்குத் தேவைப்படுகிறார்கள் என்றுரைத்த கர்தினால் Rylko, இக்காரணத்தினாலேயே, பொதுநிலையினர் இயக்கங்களும், கழகங்களும், மறைப்பணியாளராக, நற்செய்தி அறிவிப்பாளராக, ஒன்றிப்பின் உண்மையான பள்ளிகளாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.