நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தநாள நோய் வரும் வாய்ப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
சன.24,2012. "நீரிழிவு நோயாளிகளில் 15 விழுக்காட்டினர், இரத்தநாள நோய்க்கு ஆளாகின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் தங்கள் கால்களை இழக்க நேரிடுகிறது' என, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்
மருத்துவமனையின், இரத்தநாளங்கள் மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சரவணன்
தெரிவித்தார். இந்தியாவில், ஆறு கோடியே, 20 இலட்சம் பேருக்கு, நீரிழிவு நோயும், ஏழு
கோடியே, 70 இலட்சம் பேருக்கு, இந்நோய் வருவதற்கான அறிகுறியும் உள்ளதென நிருபர்களிடம்
கூறிய அவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் "பெரிபரல் வாஸ்குலர்'
எனப்படும், இரத்தநாள நோய்க்கு ஆளாகின்றனர் என்றும் கூறினார். இவர்களுக்கு, இதயத்திலிருந்து
கால்களுக்கு இரத்தம் செல்லப் பயன்படும் இரத்தக் குழாய்கள் பாதிப்படைந்து, கால்களுக்கு
செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் உள்ள கால்களில், எளிதில் புண்கள்
ஏற்பட்டு, நோயாளிகள் தங்கள் கால் விரல்களையோ, காலையோ இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது
என்றும் சரவணன் கூறினார். நடக்கும்போது காலில் ஏற்படும் வலி, கால் மற்றும் கால்
விரல்களின் நிறம் மாறுவது போன்றவை, இந்நோய்க்கான பொதுவான அறிகுறிகள். இந்நோய் முற்றிய
நோயாளிகளை, "எண்டோவாஸ்குலர், ஆஞ்சியோபிளாஸ்டிக், ஸ்டென்ட்ஸ்' போன்ற நவீன சிகிச்சை மூலம்
குணப்படுத்தலாம். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் இந்நோயால் சுமார் ஒரு கோடிப் பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்