சன.20,2012. அறிவியலுக்கும் இறையியலுக்கும் இடையே “மெய்யியல் பாலம்” ஒன்றை அமைக்கும்
நோக்கத்தில், வத்திக்கானில் புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. STOQ என்ற
இப்புதிய, அறிவியல்-விசுவாச நிறுவனம், திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ
ரவாசியின் தலைமையின்கீழ் செயல்படும். கர்தினால் ரவாசியின் விண்ணப்பத்தின் பேரில் திருத்தந்தை
16ம் பெனடிக்ட் உருவாக்கியுள்ள இப்புதிய நிறுவனம் பற்றிப் பேசிய, திருப்பீட கலாச்சார
அவையின் நேரடிப் பொதுச் செயலர் பேரருட்திரு Jose Sanchez de Toca Y Alameda, இந்நிறுவனத்தின்
நோக்கம் பற்றி விளக்கினார். அறிவியல், இறையியல், மற்றும் மெய்யியல் பற்றிய தாகத்தைத்
தணிப்பதற்கு உதவியாக 2003ம் ஆண்டில், திருத்தந்தை அருளாளர் 2ம் ஜான் பால் அவர்களால் உருவாக்கப்பட்ட
STOQ திட்டத்தின் பணியின் பயனாய், இப்புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.