இந்தியாவின் மறைபோதகர்கள் 166 நாடுகளில் பணி செய்கின்றனர்
சன.20,2012. நீண்ட காலமாக மறைபோதகத் தளமாக இருந்து வந்த இந்தியா, வெளிநாடுகளுக்கு அதிகமான
மறைபோதகர்களை அனுப்பும் நாடுகளில் ஒன்றாகத் தற்போது மாறியுள்ளது என்று இந்தியத் திருஅவை
அறிவித்தது. பெங்களூரில் இம்மாதத்தில் இந்திய ஆயர்களும் துறவு சபை அதிபர்களும் நடத்திய
கூட்டத்தில் இவ்வாறு அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மறைபோதகர்கள் 166 நாடுகளில்
சுமார் 15 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள் என்று இக்கூட்டத்தில் தெரிவித்தார் அருட்பணி
பல்த்தசார் காஸ்தெலினோ. இவ்வெண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்கும் என்றும் கூறிய
அவர், தற்போது, 214க்கும் அதிகமான துறவு சபைகள், தங்களது இந்திய மறைபோதகர்களை மறைப்பணித்தளங்களுக்கு
அனுப்பியுள்ளன என்றும் கூறினார்.