டாக்காவில் இயேசு சபையினர் புதிய கல்லூரி திறக்கத் திட்டம்
சன.19,2012. பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் இயேசு சபையினர் கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க
இருப்பதாக BBC வங்காள மொழி சேவை இச்செவ்வாயன்று தெரிவித்தது. கடந்த 150 ஆண்டுகளுக்கும்
மேலாக கொல்கத்தாவில் இயங்கி வரும் புனித சேவியர் கல்லூரியின் முதல்வர் இயேசு சபை அருள்தந்தை
பெலிக்ஸ் ராஜ், இக்கல்லூரி கல்வியில் பெற்றுள்ள பழுத்த அனுபவத்தை பங்களாதேஷ் மக்களுக்கும்
வழங்க எண்ணியுள்ளதாகக் கூறினார். பிப்ரவரி மாதம் பங்களாதேஷ் பிரதமரைச் சந்தித்து தங்களது
எண்ணத்தை வெளிப்படுத்த உள்ளதாகவும், பிரதமரின் ஒப்புதலின் பேரில் தலைநகரில் இந்தக் கல்லூரி
அமைக்கப்படும் என்றும் அருள்தந்தை பெலிக்ஸ் ராஜ் கூறினார். கொல்கத்தா இயேசு சபையினர்
டாக்காவில் ஏற்கனவே சில சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அந்நாட்டு இளையோருக்குத்
தரமான கல்வியை வழங்க இயேசு சபையினர் ஆர்வம் கொண்டுள்ளனர் என்றும் முதல்வர் பெலிக்ஸ் ராஜ்
எடுத்துரைத்தார்.