2012-01-18 15:25:46

வத்திக்கான் செய்திகள் வலைதளத்தை ஒவ்வொரு நாளும் 10,000 பேருக்கு மேல் பார்வையிடுகின்றனர்


சன.18,2012. திருப்பீடம் உருவாக்கியுள்ள செய்திகள் வலைத்தளத்தை ஒவ்வொரு நாளும் 10,000 பேருக்கு மேல் பார்வையிடுவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவையின் தலைவரான பேராயர் Claudio Maria Celli, CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில், வத்திக்கான் செய்தி வலைத்தளம் ஆரம்பித்து ஒரு சில மாதங்களே ஆகியிருந்தாலும், அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பது திருப்தியைத் தருகிறது என்று கூறினார்.
2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளன்று 16,000 பேர் இந்த வலைத்தளத்தைப் பார்வையிட்டனர் என்பதைக் கூறிய பேராயர் செல்லி, இவர்களில் 52 விழுக்காட்டினர் முதன்முறையாக பார்வையிடுபவர்கள் என்ற தகவலையும் வெளியிட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் www.news.va என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வத்திக்கான் செய்தி வலைத்தளம், ஆங்கிலம், இஸ்பானியம், இத்தாலியம், ஆகிய மொழிகளில் தற்போது இயங்கி வருகின்றது. இந்த சனவரி மாதத்தில் பிரெஞ்ச் மொழியிலும் பிப்ரவரி மாதத்தில் போர்த்துகீசிய மொழியிலும் இந்த வலைத்தளம் இயங்க உள்ளது.
நற்செய்திப் பணிகளில் புதிய முறைகளைக் கையாளுவதை ஊக்கப்படுத்தும் திருத்தந்தை, துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டில் புதிய சமூகத்தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டை மேலும் ஊக்கப்படுத்துகிறார் என்று பேராயர் செல்லி எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.