சனவரி 18, 2012. கவிதைக் கனவுகள்............. இருமனச் சங்கமம்
மனங்கள் கவர்ந்து, கலந்து, ஒருவர் மற்றவரில் தொலைந்து போவதே திருமணம். ஒன்றும்
ஒன்றும் ஒன்று என- கணிதம் தப்பாய்ப் போவதும் இங்கு தான். போர் நிகழ்த்தியும், ஏறு
தழுவியும் மடலேறியும், கல்தூக்கியும் வீரத்தின் வெகுமதியான திருமணம், இன்று
மனப்பொருத்த மறையானது. வேள்வித்தீயும், அம்மி மிதித்தலும், அருந்ததிப் பார்த்தலும், பாதபூசையும்,
மங்கல அணியும் - ஆங்காங்கே மரபொழிந்து போனாலும், மஞ்சளும் சந்தனமும் பன்னீரும்
முன்னிலை கண்டு ஆறுதலடைய முடிகிறது. பொருத்தம் பார்த்தல் இன்றும் தொடர்கிறது. மனப்பொருத்தம்
பார்த்தல் நின்று நிலைக்கிறது. திருமணம். அது சமூக சட்ட ஒழுங்கு முறை அமைப்பு. இருவரிடையே
வாழ்வு ஒப்பந்தம். புதுச் சந்ததிக்கான திருவாசல். களவொழுக்கமும் கற்பொழுக்கமும்
கலந்து சமூக நலன் கருதும் ஒழுக்க முறை. ஆம். கட்டுப்பட்ட கூட்டுப்பொறுப்பு. கட்டப்பட்ட
சுதந்திரப் பிணைப்பு.