காஷ்மீர் இசுலாமிய நீதிமன்றம், ஒரு கத்தோலிக்க மறைபோதகர் மற்றும் ஒரு பிரிந்த கிறிஸ்தவசபை
போதகர் மீது புகார்
சன.14,2012. இந்தியாவின் காஷ்மீரில் மதமாற்றப் பணிகளில் ஈடுபட்டார்கள் என்று சொல்லி,
ஒரு கத்தோலிக்க மறைபோதகர் மற்றும் ஒரு பிரிந்த கிறிஸ்தவசபை போதகர் மீது குற்றம் சாட்டியுள்ளது
காஷ்மீரிலுள்ள இசுலாமிய நீதிமன்றம். இந்நடவடிக்கை, கிறிஸ்தவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக
இருக்கின்றது என்று CSF அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது. குற்றம் சாட்டப்பட்டுள்ள
கத்தோலிக்க மறைபோதகரான அருள்தந்தை Jim Borst, காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்காக ஏறக்குறைய
ஐம்பது ஆண்டுகளாக உழைத்து வருபவர். புனித வளன் மில்கில் சபையைச் சேர்ந்த இக்குருமீது
சுமத்தப்பட்டுள்ள குற்றம் பொய்யானது என்றும், பல முஸ்லீம் தலைவர்கள் இக்குரு நடத்தும்
பள்ளியில் பயின்றவர்கள் என்றும் இவ்வறிக்கை கூறுகின்றது. காஷ்மீரில் தனிமனிதச் சுதந்திரமும்
சமய சுதந்திரமும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன என்று அவ்வறிக்கை மேலும்
கூறுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிந்த கிறிஸ்தவசபைப் போதகர் Chander
Mani Khanna, 15 இளம் முஸ்லீம் சிறுவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார் என்று சொல்லி
கைது செய்யப்பட்டுள்ளார் என்று பீதெஸ் நிறுவனம் கூறுகிறது.