எல்லா இடங்களிலும் மனிதரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது திருஅவையின் பணி
- திருப்பீடச் செயலர்
சன.14,2012. எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் மனிதரின் அடிப்படை உரிமைகளையும்
கடமைகளையும் பாதுகாத்து அவற்றை அறிவிக்க வேண்டியது திருஅவையின் பணியாக இருக்கின்றது என்று
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார். வத்திக்கான் நாட்டின்
நீதித்துறை அமைப்பின் ஆண்டுத் தொடக்கவிழாத் திருப்பலியை இச்சனிக்கிழமை நிகழ்த்தி மறையுரையாற்றிய
கர்தினால் பெர்த்தோனே, மனிதரின் அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் பாதுகாத்து அவற்றை
அறிவிப்பதில், திருஅவைப் பணியாளர்கள் எடுத்துக்காட்டாய்த் துலங்குமாறும் வலியுறுத்தினார். வத்திக்கான்
நாட்டின் நீதித்துறை அமைப்பில் பணியாற்றுவோர், திருஅவையின் இப்பணியில் ஒத்துழைப்பு கொடுத்து
உலகில் திருஅவையின் சாட்சிகளாக வாழவேண்டிய பொறுப்பையும் கொண்டுள்ளார்கள் என்றும் அவர்
தெரிவித்தார். இவ்வுலகில் கடவுளின் அன்பு மற்றும் நீதியின் அடையாளமாகவும், அவற்றின்
கருவிகளாகவும் வாழ அழைக்கப்பட்டுள்ளதையும் கர்தினால் நினைவுபடுத்தினார்.