2012-01-14 12:53:56

650 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு மியான்மார் திருஅவை வரவேற்பு


சன.14,2012. மியான்மார் அரசுத்தலைவர் தெய்ன் செய்ன் அறிவித்த பொது மன்னிப்பின்கீழ், 650 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
இவ்வெள்ளியன்று யான்கூனில் பொதுக்கூட்டத்தை நிறைவு செய்த மியான்மார் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Raymond Saw Po Ray, அரசின் இந்நடவடிக்கை, அந்நாட்டில் தனிமனித சுதந்திரம் மதிக்கப்படுவதில் மேலும் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
மியான்மாரில் அமைதி, சுதந்திரம் மற்றும் நீதியுடன்கூடிய வருங்காலத்தைக் கட்டி எழுப்புவதில் தலத்திருஅவையும், கிறிஸ்தவர்களும் முக்கியமான அங்கம் வகிப்பார்கள் என்பதில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஆயர் போ ராய் கூறினார்.
மியான்மாரில் மனச்சான்றின் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பது, பன்னாட்டுச் சமூகம் வலியுறுத்தி வரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மியான்மார் அரசு விடுதலை செய்துள்ள 650 கைதிகளில் 302 பேர் அரசியல் கைதிகள் என்று இச்சனிக்கிழமை உள்விவகாரத்துறை அமைச்சர் Ko Ko கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.