திருத்தந்தையின் புதன் மறைபோதகத்தில் கலந்து கொண்ட கியூபா நாட்டு முதலை
சன.12,2012. இப்புதனன்று நடைபெற்ற திருத்தந்தையின் மறைபோதகத்தில் கியூபா நாட்டில் அழிந்து
வரும் இனமென்று கருதப்படும் ஒரு முதலையும் கலந்து கொண்டது. உரோம் நகரில் உள்ள 'Bioparco'
என்ற மிருகக் காட்சி சாலை தன் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வாண்டின் துவக்கத்தில் திருத்தந்தையின்
ஆசீரைப் பெற வந்திருந்த இம்மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தங்களுடன் இந்த முதலையையும்
எடுத்து வந்திருந்தனர். இந்த மிருகக்காட்சி சாலையில் பாதுகாக்கப்படும் 1200 மிருகங்களின்
ஒரு பிரதிநிதியாக இந்த கியூபா நாட்டு முதலை இருந்ததென்றும், திருத்தந்தை கியூபா நாட்டுக்கு
மார்ச் மாதம் செல்லும் வேளையில் இந்த முதலையும் அந்நாட்டிற்கு அனுப்பப்படும் என்றும்
மிருகக்காட்சி சாலை அதிகாரி Paolo Giuntarelli கூறினார். கியூபாவின் அழிந்துவரும்
மிருக இனங்களின் வரிசையில் உள்ள இந்த முதலை இனம், கடந்த சில ஆண்டுகளில் 80 விழுக்காடு
அழிந்துவிட்டதென்று ஒரு செய்திக் குறிப்பு கூறுகின்றது.