2012-01-12 15:01:05

உலகில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனையை பணத்தைக் கொண்டு மட்டும் சீர்செய்யமுடியாது - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


சன.12,2012. உரோம் நகரிலும், லாசியோ மாநிலத்திலும் வாழ்வோர் மத்தியில் விருந்தோம்பல் பண்பு உள்ளதென்பதை கடந்த மேமாதம் நாம் கண்கூடாகக் கண்டோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் நகர் மற்றும் லாசியோ மாநில அரசு அதிகாரிகளை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை அவர்களுக்கு வழக்கமான புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறிய வேளையில், திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்வின்போது உரோம் நகரும் லாசியோ மாநிலமும் உரோம் நகருக்கு வந்தோரை வரவேற்றதைச் சிறப்பாக குறிப்பிட்டுப் பேசினார்..
ஒவ்வோர் ஆண்டும் இவ்வதிகாரிகளைத் திருப்பீடத்தில் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறும் திருத்தந்தை, கடந்த ஆண்டு இத்தாலியும் இன்னும் பல நாடுகளும் சந்தித்த பொருளாதாரப் பின்னடைவைக் குறித்துப் பேசினார்.
உலகின் பல பகுதிகளில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனையை பணத்தைக் கொண்டு மட்டும் சீர்செய்யமுடியாது என்றும், நன்னெறி மதிப்பீடுகள் மனிதகுலத்தில் குறைந்து வருவதே இந்தப் பிரச்சனையின் பின்னணியில் உள்ள உண்மை என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
சுயநலம் மிக ஆழமாக வேரூன்றிவிட்ட நமது சமுதாயம் மனித உறவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல் வாழ்வதே பல பின்னடைவுகளுக்குக் காரணம் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
குடும்ப உறவுகள் குறித்துப் பேசிய திருத்தந்தை, திருமண உறவால் எழுப்பப்படும் குடும்பமே உறுதியான நன்னெறிகளை வளர்க்கும் நல்லதொரு விளைநிலம் என்று விவரித்தார்.
தன் உரையின் பிற்பகுதியில் இளையோரைக் குறித்து பேசிய திருத்தந்தை, பொருளாதாரப் பிரச்சனைகள் சூழ்ந்துள்ள இவ்வுலகில், விரைவாகப் பணம் கிடைக்கும் வழிகளை இளையோர் தேடிச் செல்வதற்கு சட்டத்திற்குப் புறம்பான பல அமைப்புக்கள் உள்ளன என்பதை ஓர் எச்சரிக்கையாகக் கூறினார்.
ஒருவருக்கொருவர் ஆதரவாய் விளங்கும் மனித சமுதாயம், ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் விருந்தோம்பல், நன்னெறிகளுக்கும், சட்டங்களுக்கும் உட்பட்ட ஒரு சமுதாயம் ஆகியவற்றைக் கட்டி எழுப்புவதில் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்று தன் உரையின் இறுதியில் அரசு அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.