சன.06,2012. வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளிகளுக்கான புதிய ஓய்வூதிய மற்றும்
ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கு இந்திய நடுவணரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இத்திட்டத்தின்படி,
ஆண்டுக்கு ஆயிரம் முதல் பன்னிரெண்டாயிரம் வரை செலுத்தும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசின்
பங்களிப்பாக ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும். பெண் தொழிலாளர்களுக்கு இந்திய
அரசின் பங்களிப்பான ஆயிரம் ரூபாய் தவிர வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகத்தின்
சார்பில் கூடுதலாக இன்னொரு ஆயிரம் ரூபாயும் அளிக்கப்படும். வளைகுடா நாடுகளில் பணிபுரியும்
இந்தியத் தொழிலாளர்களை மனதில் வைத்து கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், அடிப்படையில்
வரவேற்கத்தக்கது என்றாலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கு இது போதுமானதாக இருக்குமா என்கிற சந்தேகம் இருப்பதாக பால் பாஸ்கர் கூறினார். வளைகுடா
நாடுகளில் இருக்கும் இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பல ஆண்டுகளாக கையாண்டுவரும்
அமைதி அறக்கட்டளையின் நிறுவன இயக்குனர் பால் பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.