2012-01-05 15:09:05

வடகொரியாவில் 66 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் தேவையான உணவின்றி வாடுகின்றனர் - அகில உலக காரித்தாஸ் அமைப்பு


சன.05,2012. பிறரன்புப் பணி நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகளைக் கடந்தது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
வடகொரியாவில் வளர்ந்து வரும் கவலைக்குரிய சூழல் குறித்து அண்மையில் Seoul நகரில் அகில உலக காரித்தாஸ் அமைப்பு நடத்திய ஒரு கூட்டத்தில் பேசிய கொரியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் Osvaldo Padilla இவ்வாறு கூறினார்.
பல அரசியல் தடைகள் இருந்தாலும், அவைகளைத் தாண்டி வட கொரியாவில் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகளைக் குறித்தும் பேராயர் Padilla இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
வடகொரிய அரசுத் தலைவரின் மரணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது, ஆயினும் அந்நாட்டில் உணவின்றி வாடும் பல்லாயிரம் மக்கள் உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்க வேண்டும் என்று அகில உலக காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.
பல வழிகளிலும் ஆசிய நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியா, வெள்ளம், கடும் பனிக்காலம் மற்றும் பழமையான வேளாண்மை முறைகள் ஆகிய பிரச்சனைகளால் கடும் உணவு பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது என்று காரித்தாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
காரித்தாஸ் வெளியிட்ட விவரங்களின்படி, 2 கோடியே 45 இலட்சம் மக்கள்தொகை கொண்ட வடகொரியாவில் 66 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் தேவையான உணவின்றி வாடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
வட, தென் கொரிய நாடுகளுக்கிடையில் சுமுகமான உறவுகள் இல்லாத ஒரு சூழலிலும், தென் கொரிய காரித்தாஸ் அமைப்பு வட கொரியாவின் அவசரத் தேவைகளை நிறைவு செய்து வருகிறதென்று ICN கத்தோலிக்க செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.